சென்னை: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகவும், தமிழக அரசு அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது கல்வீசப்பட்டது. இதையடுத்து இலேசான தடியடி நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்கள் சிலருக்கு இலேசான காயம் ஏற்பட்டது.
கல்வீச்சில் காவல்துறை இணை ஆணையாளர், ஆய்வாளர் ராஜ்குமார், ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண் காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.
காவல்துறை இணை ஆணையாளர் தவிர மற்ற மூன்று பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முதியவர் ஒருவரின் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் முதியவர் இறந்துவிட்டதாகவும் தகவல் பரவியது.
இதனால் போராட்டம் வலுவடைந்ததாக கூறப்படுகிறது.
அதனையடுத்து முதலமைச்சர் பழனிசாமியைச் சந்தித்து இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் விளக்கம் அளித்தார் என்று கூறப்படுகிறது.
போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 120 பேரை விடுவிக்கக்கோரி வண்ணாரப்பேட்டை, ஆலந்தூர், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை இரவு திடீரென முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை தரப்பில், முதியவர் யாரும் இறக்கவில்லை என்றும் அது தவறான தகவல் என்றும் கூறியுள்ளனர்.
ஊதிப்பெரிதாக்க வேண்டாம் என காவல்துறை வேண்டுகோள்
பொது நலன், பொது அமைதி கருதி எந்த ஒரு சம்பவத்தையும் பெரிதுபடுத்த வேண்டாம் என்று சிஏஏ போராட்டக்காரர்களிடம் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் அனைத்து முஸ்லிம் சங்கத் தலைவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட தலைவர்கள், சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் முதற்கட்டமாக கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரினர். அந்தக் கோரிக்கையை ஏற்று சென்னையில் கைது செய்யப்பட்ட 147 பேரையும் போலிஸ் விடுவித்தது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், “சாலை மறியல் மற்றும் கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து அனைத்து தலைவர்களையும் இங்கு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களிடம் அமைதிகாக்க வேண்டும், இந்தப் பிரச்சினை எந்தவிதத்திலும் பெரியளவில் பரவி விடக்கூடாது, பொது அமைதி மிக முக்கியம் என்பதை நாங்கள் எடுத்துக்கூறி அவர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவர்களும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்துச் சென்றிருக்கிறார்கள். மக்கள் அனைவரும் பொதுநலன் கருதி, பொது அமைதி கருதி எந்த ஒரு சம்பவத்தையும் பெரிதுபடுத்தாமல் தீர்வு காணும் வகையில் செயல்பட வேண்டும் என்று அனைவரிடமும் நாங்கள் கேட்டுக்கொண்டோம்,” என்றார்.