சென்னை: அதிமுக அரசு நீண்டகாலம் நிலைக்காது. எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடலாம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்துள்ள வேளையில் எடப்பாடி பழனிசாமி வலுவான தலைவராக உருவெடுத்து வருகிறார். அவரது தலைமையிலான அதிமுக அரசு வெற்றிகரமாக 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இ்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுக அரசு மூன்று ஆண்டுகளைக் கடந்து நேற்று பிப்ரவரி 16ஆம் தேதி நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் ஆளுநா் மாளிகையில் தமிழகத்தின் 13வது முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு தொண்டர்கள் இனிப்புகளை வழங்கினர்.
இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்த முதல்வர் பழனிசாமி புது வியூகம் வகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் சேர்க்க 100 ஐஏஎஸ் அதிகாரிகளை களமிறக்கவும் திமுகவின் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் தந்திரங்களை தவிடுபொடியாக்கவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் இணைந்து பணியாற்றுவதற்காக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்துடன் திமுக தலைமை ஒப்பந்தம் செய்துள்ளது.
இவர்கள் அரசுக்கு எதிரான பணிகளில் கவனம் செலுத்தவுள்ளனர். மக்களிடம் நுாதன பிரசாரங்களை மேற்கொள்ள உள்ளனர்.
இதன் காரணமாக அண்மையில் நடந்த அதிமுக அமைச்சரவை கூட்டத்திற்குப் பின் ரகசிய ஆலோசனை நடந்துள்ளது.
அதில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் பங்கேற்றுள்ளனர். திமுகவிற்கு ஒரு பிரசாந்த் கிஷோர் என்றால் அதிமுகவிற்கு 100 ஐஏஎஸ் அதிகாரிகள் களமிறங்கவுள்ளனர்.