சேலம்: சேலம் தம்மம்பட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 30 இளையர்கள் காயம் அடைந்தனர். சுற்று வட்டாரத்திலிருந்து 650க்கும் மேற்பட்ட காளைகளை போட்டியில் பங்கேற்பதற்காக மாட்டின் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். இதேபோல், மாடுபிடி வீரர்கள் 300 பேர் பங்கேற்றனர்.
வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப் பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர். இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி தள்ளியதில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். லேசான காயம் அடைந்தவர்களுக்கு அங்கேயே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். படுகாயம் அடைந்த வீரர்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஆத்தூர் அரசு மருத்துவ மனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.