சென்னை: ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் பலியான 16 போலிசார் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய விஜயதரணி, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது 16 போலிசார் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.
“அவர்களில் என் தாயாரும் ஒருவர். ராஜீவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாகவும், தற்போது சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலையை சட்டம் முடிவு செய்யட்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.
“அந்த 7 பேரின் விடுதலையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை. விடுதலை ஆகும் பட்சத்தில் அதற்கு முன்பாக அந்த 16 போலிசாரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்,” என்று விஜயதரணி கோரிக்கை விடுத்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் இழப்பீட்டை அளிக்க அரசு முன்வர வேண்டும் என்றார் விஜயதரணி.