வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6ஆம் தேதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார்.
அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சந்துரு (24). பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்கள் மாணவியைப் பார்த்ததும் அவருக்குத் தெரியாமல் பின் தொடர்ந்து சென்று அவரை மடக்கினர்.
மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்றனர். சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதனால் பீர் பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
பின்னர் அந்த சிறுமி சுதாரித்துகொண்டு சுடுகாட்டில் பிணத்தின் மீது போர்த்த பயன்படுத்திய உடைகளை எடுத்து தன் மீது போர்த்திக்கொண்டு வீட்டிற்கு தப்பி வந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார். அவர்கள் உயிருக்கு பயந்து வெளியே சொல்லாமல் மறைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த நிலை வேறு பெண்ணிற்கு வரக்கூடாது என்பதால் சிறுமியின் உறவினர் ஒருவர் வாணியம்பாடி தாலுகா போலிசில் இதுகுறித்து புகார் செய்தார். ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி, கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அவர்கள் மீது மேலும் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

