வேலூர்: ஆம்பூர் அருகே வீட்டில் சட்டவிரோதமாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வந்த 2 பேரை மகாராஷ்டிரா மற்றும் தமிழகக் காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
வேலூரைச் சேர்ந்த பாஸ்கர், அய்யனூரைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அய்யலூர் பகுதியில் வீட்டில் 500 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டனர்.
மகாராஷ்டிர மாநிலக் காவல்துறை அதிகாரிகளும் ஆம்பூர் காவல்நிலைய அதிகாரிகளின் உதவியுடன் சரவணனை கைது செய்தனர்.
பாஸ்கரன், கள்ள நோட்டை மும்பையில் மாற்ற முயற்சி செய்தபோது கடந்த 3ஆம் தேதியே கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இப்போது சரவணன் பிடிபட்டார்.
இந்த இருவரும் வண்ண நகல் எடுக்கும் இயந்திரம் மூலம் கள்ளநோட்டு அடித்தது தெரியவந்துள்ளது.
அய்யனூரில் ஒரு வீட்டில் இருந்து ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அவர்களிடம் இருந்து கணினிகள், அச்சு இயந்திரங்கள், கைத் தொலைபேசிகள் போன்றவற்றையும் போலிசார் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

