சென்னை: 'என்பிஆர்' என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு விவகாரத்தில் இஸ்லாமிய மக்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடுகின்றன என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை நேற்று கூடியபோது தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
இதற்கு சபாநாயகர் தனபால் கண்டனம் தெரிவித்தார். திமுக உறுப்பினர்களின் கோரிக்கையை விவாதிக்க சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியபோது, தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப் பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் உதயகுமார், 'என்பிஆர்' நிறுத்திவைப்பு என்பது புதிய அறிவிப்பு இல்லை, பேரவையில் கூறியதையே செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தேன். இதில் உரிமை மீறல் எதுவும் இல்லை என்றார்.
இதன் பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "என்பிஆர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இஸ்லாமிய மக்களைத் தூண்டி விடுகின்றன. சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பதற்றமான சூழலை உருவாக்க வேண்டாம்," என கேட்டுக் கொண்டார்.
அதன் பின்னர் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் என்பிஆர் பணிகள் தொடங்கப்படவில்லை என அறிவித்தார்.
நேற்று முன்தினம் சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் என்பிஆர் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் மீண்டும் இதனை பேரவையிலும் வலியுறுத்தியுள்ளார்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த இஸ்லாமிய தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்து உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இன்று மாலை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

