சென்னை: ஓசூரில் ரூ. 635 கோடி மதிப்பில் மின்சாரத்தில் இயங்கும் 'பைக்' தொழிற்சாலை தொடங்கப் படவுள்ளது,
இதன் மூலம் 4,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று நேற்று சட்டசபையில் பேசிய அமைச்சர் எம். சி. சம்பத் தெரிவித்தார்.
ஓசூர் தொகுதி எம்எல்ஏ சத்யா, தனது தொகுதியின் தொழில் வளர்ச்சி குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் சம்பத் பேசினார்.
"எலக்ட்ரிக் பைக் நிறுவனம் ஒன்று, ஓசூரில் ரூ. 635 கோடி முதலீட்டில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிறுவனம், பெங்களூரை சேர்ந்தது.
"கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், இதற்கான புரிந்துணர்வு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலை அமைவதன் மூலம் 4,300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"சென்னைக்கு அடுத்தபடியாக ஓசூர் நகரில் தொழில் தொடங்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இதை அறிந்துதான் முதலீட்டாளர்களிடம் அரசு அரவணைப்புடன் செயல்படுகிறது.
"ஓசூர் நகரில் செயல்படும் சிப்காட்-2 கேம்பசில், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் 5 புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
"ஆட்டோ மொபைல் துறை வளர்ச்சியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
"தமிழகத்தில் 4,000 ஏக்கர் பரப்பளவில் 'பி6' இயந்திரங்கள் தயாரிக்கக்கூடிய வகையில் 'எலக்ட்ரிக் பூங்கா' அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றும் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

