அண்ணாநகர்: சென்னை விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்துள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்குப் போலி மிரட்டல் விடுத்தவரை சென்னை போலிசார் கைது செய்தனர்.
ஐயப்பன், 35, என்ற அந்த நபர் ஒரு மாற்றுத் திறனாளி. அரசாங்கத்தின் இலவச வீட்டைப் பெறுவதற்காக கடந்த 12ஆம் தேதி மனுக்கொடுக்க தலைமைச்செயலகம் சென்றபோது போலிசார் தன்னை விரட்டிவிட்டதாகவும் அதனால் விரக்தியடைந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் கூறினார். அதிகாரிகள் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

