கும்பகோணம்: கும்பகோணத்தில் தங்க நகைகள், பணத்தைக் கொடுத்து மனைவியை காப்பாற்றிய நகை வியாபாரி ஒருவர் தன்னுயிரை இழந்துள்ளார்.
நகை வியாபாரி ஒருவரை ஞாயிறு இரவு சந்தித்து திருமணப் பத்திரிகை கொடுக்கவேண்டும் என்று பொய் பேசிய கும்பல், அந்த வியாபாரியை இரும்புக்கம்பியால் தாக்கிக்கொன்றது.
அதன்பின்னர் வியாபாரி வைத்திருந்த நகை பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடிய கும்பலை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கும்பகோணம், மேலக்காவேரியைச் சேர்ந்தவர் ராமநாதன், 63. இவர் அங்குள்ள சண்முகம் தெருவில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
வீட்டில் ஞாயிறு இரவு ராம நாதனும் அவரது மனைவி விஜயாவும் ெதாலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திருமணப் பத்திரிகை கொடுப்பதாகக் கூறி வீட்டுக்குள் அடையாளம் தெரியாத இருவர் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து மேலும் மூவர் வீட்டுக்குள் நுழைந்தனர்.
இதையடுத்து ஐவரும் ராம நாதனைத் தாக்கி நகை, பணத்தைத் தரும்படி கேட்டுள்ளனர். அவற்றை ராமநாதன் கொடுக்க மறுக்கவே அவரது மனைவி விஜயாவை ஓர் அறையில் தள்ளி பூட்டினர்.
அப்போது ராமநாதன் தனது மனைவியை எதுவும் செய்யவேண்டாம் என கெஞ்சி உள்ளார்.
"பணம் கொடுத்தால் உனது மனைவியை விட்டுவிடுகிறோம்," என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்து வந்து ராமநாதன் அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார்.
நகை, பணத்தை வாங்கிக் கொண்ட அந்த ஆடவர்கள் "உன்னைக் கொல்லாமல் விட்டால் போலிசாரிடம் எங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவாய்," எனக் கூறி அவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்புக் கம்பியால் ராமநாதனை தாக்கியுள்ளனர். இதில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அறையிலிருந்து வெளியே வந்த விஜயா, தனது கணவர் இறந்து கிடப்பதைப் பார்த்து அரண்டு அழுதார். அக்கம்பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. கொலை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றன மோப்ப நாய்கள். அவை யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

