புதுக்கோட்டை: கொரோனா கிருமித் தொற்று காரணமாக ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடுவதற்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பத்தாயிரம் பேர் கூடியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
நேற்று காலை விராலிமலை அருகேயுள்ள ராஜகிரி மற்றும் பொன்னமராவதி அருகே உள்ள பொன்னம்பட்டி ஆகிய ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன.
ராஜகிரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. அதே போல் பொன்னம்பட்டியிலும் நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்றன. இரண்டு போட்டிகளையும் கண்டு ரசிக்க பத்தாயிரம் பேர் திரண்டிருந்தனர்.
ராஜகிரியில் 300 மாடுபிடி வீரர்களும், பொன்னம்பட்டியில் 350 வீரர்களும் காளைகளை அடக்க களமிறங்கினர்.
இரு போட்டிகளுமே சிறப்பாக நடைபெற்றதாக தகவல் வெளியான நிலையில், தமிழக அரசின் அறிவுறுத்தலையும் மீறி ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரளும் வகையில் நிகழ்ச்சி நடத்தி இருப்பதற்கு கண்டனம் கிளம்பியுள்ளது.
மேலும் இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் நடத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதற்கிடையே, புதுக்கோட்டையில் மேலும் சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றையாவது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

