திண்டுக்கல்: கொரோனா கிருமித் தொற்று பரவல் காரணமாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தடுக்கப்படுகின்றனர். மேலும் அங்கிருந்தும் யாரும் வெளியூர் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுவதால் கொடைக்கானல் தனித்தீவைப் போல் மாறிவிட்டதாக அங்குள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, கொடைக்கானலில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக கொடைக்கானலில் இருந்து அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.
இதையடுத்து பெரும்பாலான வெளிநாட்டவர்கள் வெளியேறிவிட்டனர். எனினும் இஸ்ரேலை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் விசா உள்ளிட்ட பிரச்சினைகளால் அங்கேயே முடங்கி உள்ளனர். அவர்களின் நிலையை அறிந்து இம்மாத இறுதி வரை கொடைக்கானலில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த இரு தினங்களாக கொடைக்கானலுக்கு வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்களை மூட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் அவை வெறிச்சோடி காணப்படுகின்றன.
கார், பேருந்துகள் மூலம் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப் பட்டனர். வரும் 31ஆம் தேதி வரை கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைவர் திரிபாதி எச்சரித்துள்ளார்.
வதந்தி பரப்பிய சிலர் கைதாகி இருப்பதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் வதந்தி பரவியது.

