சென்னை: கொரோனா கிருமித் தொற்று பீதி காரணமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆசிரியர்கள் தங்கள் வீடுகளிலும், தனியார் மையங்களிலும் மாணவர்களுக்கு டியூஷன் வகுப்புகள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு உத்தரவை மீறி சில தனியார் பள்ளிகள் இயங்குவதாக தகவல் வெளியானதை அடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு தங்கள் வீடுகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.
தனியார் மையங்களுக்குச் சென்றும் ஆசிரியர்கள் வகுப்புகள் நடத்துவதாக தொடர் புகார்கள் எழுந்ததை அடுத்து, கல்வித்துறை அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், வீடுகள் மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் ஆசிரியர்கள் சிலர் சிறப்பு வகுப்புகளை எடுப்பது அரசு உத்தரவுக்கு எதிரானது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள கல்வித்துறை, அரசு ஆணைக்குப் புறம்பாகச் செயல்படும் ஆசிரியர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் திரட்டி பள்ளிக் கல்வித்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
கொரோனா பீதி காரணமாக பள்ளித் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேர்வுக்கு மேலும் தீவிரமாக தயாராகலாம் என்று சொல்லி தனியார் கல்வி மையங்கள் சிறப்பு வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக கணிசமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும், அதில் குறிப்பிட்ட தொகை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

