மதுரை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் கொரோனா கிருமி நோய் சிகிச்சைக்காக தனி அறை களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவ மனைக்கு சளி, காய்ச்சல் காரணமாக பலர் சிகிச்சைக்கு வந்தனர். அவர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறி இருக்கிறதா என்ற சந்தேகத்தில் பரிசோதனை நடத்தப் பட்டது. ஆனால் யாருக்கும் கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று கொரோனா கிருமி அறி குறியுடன் 50 வயது பெண் சிகிச்சைக்கு வந்தார். விருதுநகர் மாவட்டம் மம்சாபுரத்தைச் சேர்ந்த அந்த பெண், கேரள மாநிலத்தில் பழக்கடையில் வேலை பார்த்து உள்ளார். அவருக்கு சில நாட்களாக சளி, காய்ச்சல் இருந்ததால் சொந்த ஊரில் உள்ள மம்சாபுரம் அரசு மருத்துவமனைக்கு அவர் வந்தார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண்ணை மதுரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரது சளி, ரத்த மாதிரிகளைச் சேகரித்து தேனி ஆய்வு மையத் திற்கு அனுப்பினர். அதன் முடிவுகள் வந்த பிறகே அவருக்கு கிருமித் தொற்று உள்ளதா என்பது தெரிய வரும். அதுவரை அவர் மருத்துவர் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.