சென்னை: கோயம்பேடு சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை வாங்கிய சில்லறை வியாபாரிகள் அதை விட அதிகமாக விலை வைத்து விற்றதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அதிகளவில் வாங்கினர்.
தேவை அதிகரித்ததை அடுத்து கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கத்திரிக்காய், உருளை உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை கிலோ 30 ரூபாய்க்கு விற்ற காய்கறிகளின் விலை, 60 முதல் 70 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதே போல் பழங்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால் பொது மக்கள் திகைத்துப் போயினர்.
எனினும் 144 தடை உத்தரவை மனதிற்கொண்டு கையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப காய்கறிகளை குறைவாக வாங்கிச் சென்றனர்.
காய்கறிகளின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

