சென்னை: தமிழகத்தில் நேற்று மேலும் ஐவருக்கு கொரோனா கிருமித்தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனீசியாவைச் சேர்ந்த நான்கு பேருக்கும் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18ஆக இருந்தது. வெளிநாடுகளில் இருந்து கடந்த சில தினங்களில் தமிழ்நாட்டுக்கு வந்தவர்களில் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் பேர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் 15,298 பேர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஊர்களில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 28 நாட்கள் கண்டிப்பாக வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டவர்களில் 743 பேரின் ரத்த மாதிரி இதுவரை சோதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 608 பேருக்கு கொரோனா கிருமி தாக்கம் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 120 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை வரவேண்டி உள்ளது.

