சென்னை: கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த மாநிலமும் நேற்று முடங்கியது. ஏற்கெனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி அறிவித்த மக்களின் ஊரடங்கு காரணமாக எல்லா மாநிலங்களோடு தமிழகமும் முடங்கியது. மீண்டும் நேற்று தமிழகத்தில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. மக்கள் நடமாட்டம் பெரும்பாலும் குறைந்துவிட்டது.
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் நடப்புக்கு வந்துள்ள 144 தடை உத்தரவு ஏப்ரல் 1ஆம் தேதி காலை வரை நீடிக்கும். இந்த உத்தரவின்படி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அத்தியாவசிய மற்றும் அவசர பணிகள் தவிர மற்ற பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்கவில்லை.
மக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்கவேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வந்தாலும் மற்றவர்களுடன் 1 மீட்டர் அல்லது 3 அடி தூரம் இடைவெளி விட்டு விலகலை கடைப்பிடிக்கவேண்டும். பொது இடங்களில் 5 பேருக்கு மேல் மக்கள் கூடுவது தடை செய்யப்படுகிறது. அனைத்து இடங்களிலும் அம்மா உணவகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன.
மளிகை கடைகள், உணவகங்கள் செயல்படலாம். உணவகங்களில் இருந்து வீட்டுக்கு உணவு வாங்கிச் செல்லலாம். ஆனால் அவற்றில் அமர்ந்து சாப்பிட தடை. டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.
அனைத்து அரசு அலுவலகங்கள், சுயாட்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியனவும் மூடப்படுவதோடு மாநிலங்களுக்கு மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அனைத்து கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு பணியாற்றவேண்டும்.
அனைத்து மதவழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கும் பூஜைகளுக்கும் அனுமதி கிடையாது. ஆனால் தினசரி பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்.
இதற்கிடையே, சென்னையில் 144 தடை உத்தரவை மதிக்காமல் ஊர் சுற்றிய பயணிகளிடம் காவலர் கையெடுத்து கும்பிட்ட காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை அண்ணாசாலையில் ஸ்பென்சர்பிளாசா அமைந்திருக்கும் முக்கிய சந்திப்பில் வாகனங்களில் சென்றவர்களைத் தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரஷீத், கை எடுத்து கும்பிட்டு, "தயவு செய்து தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள்," என கேட்டுக்கொண்டார். அப்போது திடீரென இளைஞர் ஒருவர் காவல் ஆய்வாளரின் காலில் விழுந்து, மன்னிப்புக் கேட்டு சென்றது வாகன ஓட்டிகளிடையே வியப்பை ஏற்படுத்தியது.
தற்போது இந்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தெலுங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் வெளியே வரும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் தடியடி நடத்தி வீட்டுக்கு அனுப்பிவைக்கின்றனர்.
உத்தரகாண்டில், 'நான் சமூக விரோதி' என்று எழுதப்பட்ட காகிதத்தைக் கையில் கொடுத்து காவல்துறையினர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆய்வாளரின் நடவடிக்கை பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

