சென்னை: கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தின் பேரில் தமிழக போலிசார் 8,136 பேரைக் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக 1,434 வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களை மடக்கிப் பிடித்த போலிசார் வெறும் எச்சரிக்கையுடன் அனுப்பி வைத்தனர்.
இதற்குப் பிறகும் ஊரடங்கு உத்தரவை மீறி நடமாடிய பலரை போலிசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் நேற்று வரை 8,136 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில் பலரிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், கொரோனா கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தும் வீட்டை விட்டு வெளியே வந்த 6 பேரும் வதந்தி பரப்பிய 8 பேரும் கைதாகி உள்ளனர்.
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு போலிசார் நூதன தண்டனை அளித்து வருகின்றனர். இதற்குப் பரவலாக பாராட்டும் கிடைத்து வருகிறது.
அரசின் அறிவுறுத்தலை மீறி வெளியே நடமாடும் நபர்களை மடக்கிப் பிடித்த போலிசார் தோப்புக்கரணம் போட வைத்தனர். சிலர் கால் வலி, முட்டி வலி என்று புலம்பிக் கெஞ்சியபோதும் விடவில்லை.
பொதுமக்களை இவ்வாறு தண்டிப்பது சரியல்ல என்றும் இதுதான் சூழ்நிலைக்கு ஏற்ற சரியான நடவடிக்கை என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது தோப்புக்கரண தண்டனை. சில இடங்களில் தேவையின்றி ஊர் சுற்ற மாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பதுபோல் சத்தியம் செய்யுமாறு போலிசார் உத்தரவிட்டனர். படம்: ஊடகம்