தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இன்று வியாழன் முதல் ரூ.1,000 ரொக்கப் பணம் விநியோகம் செய்யப்பட உள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வெளிநடமாட்டம் இன்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில் அன்றாட ஊழி யர்கள் போதிய வேலை வாய்ப்பின்றி, சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங் கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, இன்றுமுதல் ரேஷன் கடைகளில் இவற்றை வழங்க உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் ஒரு கோடியே 88 லட்சத்து 29 ஆயிரத்து 73 பேர் உள்ளனர்.
இவர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரண உதவி வழங்குவதற்காக ரூ.1,882 கோடியே 90 லட்சத்து 73 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளாக வெளிப்படையாக தலா ரூ.1,000 வழங்க உள்ளனர்.
தற்போது கொரோனா நோய் பரவும் அச்சம் இருப்பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தினமும் 100 ரேஷன் அட்டைகளுக்கே ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாத பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 15 நாட்களுக்கு இது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.