சென்னை: கொரோனா கிருமி மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் எங்கும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 3,963 கைதிகள் பிைணயில் விடு விக்கப்பட்டு உள்ளனர்.
போலிசார் அவர்களை காவல் துறை வாகனங்களில் அழைத்துச் சென்று அவர்களது வீடுகளில் விட்டுவருவதால் கைதிகள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்தக் கிருமியால் நேற்றுடன் 54,000 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கிருமியைக் கொல்வதற்கு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்காமல் உள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பான இடைவெளி விட்டு தனித்திருப்பதே உயிர் அழிவைக் கட்டுப்படுத்த இப்போதைய தீர்வாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக சிறைகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறைத்துறை தலைவர் டிஜிபி சுனில்குமார் சிங் மேற்பார்வையில் நடந்துவருகிறது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 10 நாட்களில் 3,963 கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழக சிறைகளில் உள்ளவர்களில் 70% விசாரணைக் கைதிகள், 30% தண்டனைக் கைதிகள். இவர்கள் கூட்டமாக ஒரே இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு இந்தக் கிருமி பரவும் அபாயம் அதிகம் உள்ளதால் அவர்களைப் பிணையில் வெளியே அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அது தொடர்பாக சிறைத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகச் சிறைகளில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள 50% கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு தினங்களில் சென்னை புழல் சிறையில் இருந்து 200 கைதிகள் பிணை யில் விடுதலையாகி வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால் சிறைகளில் கைதிகளின் கொள்ளவு குறைந்துள்ளது. மீதமுள்ள கைதிகளிடையே சமூக இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் உள்பட சுகாதார விதிகளைக் கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிப்படையும் நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்படுகிறது,’’ எனத் தெரிவித்துள்ளார்.