சென்னை: கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக், டுவிட்டர், யுடியுப் உள்ளிட்ட சமூக வலைத் தளப் பக்கங்களில் காணொளி ஒன்றை அவர் பதிவேற்றியுள்ளார்.
“எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அன்றாடம் மக்களை நேருக்கு நேராகச் சந்தித்தே பழக்கப்பட்டவன் நான். ஆனால் கொரோனா கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக நாம் எல்லாருமே இப்போது தனித்து இருக்க வேண்டிய சூழ்நிலை. அவரவர் வீடுகளில் தனித்து இருந்தால்தான் கிருமியைக் கொல்லவும் முடியும், வெல்லவும் முடியும். அதனால்தான் வீடியோ மூலமாக உங்களைச் சந்திக்கிறேன்.
“இந்த சமயத்தில் நிறையப் படியுங்கள். எழுதுங்கள். பிள்ளைகளுடன் பேசுங்கள். பெற்றோர்களின் அனுபவங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். உற்சாகமாகக் கழியுங்கள். இந்த 21 நாள் அனுபவம் நிச்சயம் உங்களுக்கு மனநிம்மதியைத் தான் தரும். மனக்கஷ்டத்தைத் தராது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
“கொரோனா நோயால் பாதிக்கப்படுபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சென்னை ‘அண்ணா அறிவாலயம்’ வளாகத்தில் உள்ள ‘கலைஞர் அரங்கத்தை’ அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தோம்.
“சென்னையில் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் உள்ள தி.மு.க. கட்டடங்களும் மக்கள் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம்!
“நாடு இப்பொழுது மிக மோசமான நிலைமையில் இருக்கிறது. சிலர் சொல்வது போல இது சுகாதாரப் பேரிடரோ அல்லது பொருளாதாரப் பேரிடரோ மட்டுமன்று; மிகப்பெரிய சமூகப் பேரிடராகவும் மாறிவிட்டது என்பதுதான் உண்மை! இதை மக்கள் அனைவரும் உணர வேண்டும். முதலில் தமிழக அரசு உணர வேண்டும். ஏதோ சலுகைகள் அறிவித்தோம்; அதோடு தங்கள் கடமை முடிந்ததாக நினைத்துவிடக் கூடாது. ஒவ்வொரு அறிவிப்பும் கடைசி மனிதனையும் போய்ச் சேர்ந்ததா என்பதை சரி பார்க்க வேண்டும்.
“இந்தியா இரண்டு மாபெரும் நோய்களை வென்றுவிட்டது. ஒன்று, பெரிய அம்மை; இன்னொன்று போலியோ. அதே போல இந்த கொரோனாவையும் இந்தியா நிச்சயம் வெல்லும்” என்று சொல்லி இருக்கிறார். அந்த தன்னம்பிக்கைதான் இப்போது நமக்குத் தேவை,” என்று மேலும் மு.க. ஸ்டாலின் காணொளியில் தெரி வித்துள்ளார்.