சேலம்: கிருஷ்ணகிரியில் எட்டு டன் மல்லிகைப் பூக்கள் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் நாள்தோறும் பல லட்ச ரூபாய் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மைக்கொட்டாய், மலையாண்ட அள்ளி, வேலம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு சாகுபடி செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
அங்கு ஏலத்தில் பூக்கள் விற்கப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.
ஆனால் தற்போது கொரோனா கிருமி நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மல்லிகைப் பூக்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய விவசாயி ஒருவர், “பெங்களூரு சந்தைக்கு தினமும் 10 டன் பூக்களும் விழாக்காலங்களில் அதிகபட்சம் 20 டன் பூக்களும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த பத்து நாட்களாக ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலங்கள் மூலம் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் உள்ளுர் வர்த்தகமும் முற்றிலும் முடங்கியுள்ளது,” என்றார்.
இதனால் நாள்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.
இதனால் பூக்கள் மலர்ந்து செடிகளிலேயே வீணாகி வருகின்றன.
இதனால் ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.30 லட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, மலர் பயிரிடுபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது குறித்து விளக்கிய தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், “எட்டு டன் மல்லிகைப் பூக்கள் பறிக்கப்படாமல் செடிகளிலேயே உள்ளது. இரண்டு டன் பூக்கள் திருப்பத்தூர் பகுதியில் வாசனை திரவிய தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது” என்றார்.