சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் கொரோனா கிருமித் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி ஒருவர் நன்கு குணம் அடைந்து இல்லம் திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொழிச்சலூரைச் சோ்ந்த அந்த மூதாட்டியின் புகைப்படத்தை முதல்முறையாக வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், மூதாட்டியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மூதாட்டி உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை வென்றிருப்பதும் அச்சத்தில் உறைந்திருக்கும் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த மாதம் 26ஆம் தேதி மூச்சுத்திணறல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
"அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய், ரத்த அழுத்த நோய் பாதிப்பும் இருந்து வந்துள்ளது. இதையடுத்து, மருத்துவக் குழுவினரின் தீவிர சிகிச்சையால் அவர் பூரண குணமடைந்து நேற்று தனது இல்லத்திற்கு திரும்பினார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களில் முன்னதாக 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், நேற்று மேலும் இருவர் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறைச் செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

