மார்ச், ஏப்ரல் மாதங்களில் அறிவிக்கப்பட்ட மீட்சிக்கான மற்றும் ஒற்றுமைக்கான வரவுசெலவுத் திட்டங்கள் தொடர்பான திருத்தப்பட்ட துணை வழங்கீட்டு மசோதாவுக்கு அதிபர் ஹலிமா யாக்கோப் ஒப்புதல் அளித்துள்ளார்.
சிங்கப்பூரின் நிதியிருப்பிலிருந்து $21 பில்லியனை எடுக்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், வர்த்தகங்கள், குடும்பங்களுக்கு மேற்கூறப்பட்ட வரவுசெலவுத் திட்டங்கள் கைகொடுக்கின்றன.
கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், அரசாங்க ஆதரவு நடவடிக்கைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை திருவாட்டி ஹலிமா வலியுறுத்தினார்.
“சிங்கப்பூரர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தணிப்பது முக்கியம். இந்தச் சவால்மிக்க காலகட்டத்தை அனைவரும் கடக்க நாம் உதவுவது அவசியம்,” என்று நேற்று அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.
“நிலைமை மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, புதிய நடவடிக்கைகளைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவது முக்கியம். அதேவேளையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பதில் நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.