சென்னை: ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலையில் சென்னையில் வழிப்பறிக் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளை நோட்டமிட்டு வழிப்பறிக் கொள்ளையர்கள் தங்களது கைவரிசைகளைக் காட்டி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து வழிப்பறிச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. அதேபோல் சிலர் மளிகைக் கடைகளைக் குறிவைத்து அங்குள்ள பொருட்களைக் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
சென்னை மாநகர் முழுவதும் போலிசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வந்தாலும் வழிப்பறிக் கொள்ளையர்களைத் தடுக்க முடியவில்லை. கொள்ளையர்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனத்தில் சுற்றுவது தெரியவந்துள்ளது.
சென்னை வடபழனியில் மத்திய அரசு ஊழியரிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் கைபேசியைப் பறித்துச் சென்றுள்ளனர். நுங்கம்பாக்கம் பகுதியில் தனியே நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 5 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சங்கிலிப் பறிப்பு, கைபேசிப் பறிப்பு, பணப்பை பறிப்பு என தொடர் சம்பவங்கள் பதிவாகி வருவதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே, ஆங்காங்கே உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு வழிப்பறிக் கொள்ளையர்களுக்கு போலிசார் வலைவீசி வருகின்றனர்.

