சென்னை: ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே அதிக நேரத்தைச் செலவிடும் மக்கள் பலருக்கும் உடல் உழைப்பு இல்லாததால் உடல் எடை அதிகரிக்கும் ஆபத்து உள்ளதாக எச்சரித்துள்ள இதய நோய், ஊட்டச்சத்து நிபுணர்கள், உணவில் அதிகளவு காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளும்படி அறிவுரை கூறியுள்ளனர்.
கொரோனா கிருமி மேலும் பரவாமல் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் பெரும்பாலான அலுவலகப் பணியா ளர்களும் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகின்றனர்.
குழந்தைகள் பூங்காக்கள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் வீட்டுக்குள்ளேயே தொலைக்காட்சி பார்ப்பது, அறைக்குள்ளேயே விளையாடுவது என பொழுதைக் கழிக்கின்றனர்.
இப்படி வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து இதயவியல் மருத்துவர்கள் கூறுகையில், "உடல் உழைப்பு குறையும்போது பருமன் நிச்சயம் அதிகரிக்கும். உடல் பருமன் எப்போதுமே நல்லதல்ல. ஆரோக்கியமான உடல்தான் நம்மை நீண்ட காலம் வாழவைக்கும்.
"தற்போதைய ஊரடங்கால் வழக்கமான நடைபயிற்சி, உடற்பயிற்சியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை உடல் உழைப்பு இல்லாதபோது 5 கிலோ முதல் 10 கிலோ வரை உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது இதயம் தொடர்பான நோய்கள் மற்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லதல்ல.
"எனவே தினமும் வீட்டிலேயே தியானம், யோகா வில் ஈடுபடுங்கள். முடிந்தவரை வீட்டு வளாகத்திலேயே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யுங்கள். பிள்ளைகளுடன் விளையாடி சுறுசுறுப்பாக இருங்கள். அடிக்கடி தூங்காதீர்கள். இதையெல்லாம் முறையாக கடைப்பிடித்தாலே உடல் பருமன் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்," என்று கூறியுள்ளனர்.
ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில், "உடல் உழைப்பு அதிகம் தேவைப்படாத இந்த ஊரடங்கு காலத்தில் முடிந்தவரை கடின உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அதிகளவில் உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
"குளிர்பானங்களுக்கு பதிலாக எலுமிச்சை சாறு, மோர், லஸ்சி, இளநீர் போன்ற பானங்களை அருந்து வது உடலுக்கு நல்லது. உடல் பருமன் பிரச்சினையில் சிக்கிவிடாமல் ஆரோக்கிய வாழ்க்கை வாழ கற்றுக்கொள்ளுங்கள்," என்று அறிவுறுத்தியுள்ளனர்.

