சென்னை: ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து 68 லட்சத்து 57 ஆயிரத்து 344 ரூபாய் அபராத தொகை வசூலாகி உள்ளது என காவல்துறை தெரிவித்து உள்ளது. மேலும், 1.75 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து 1 லட்சத்து 39 ஆயிரத்து 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
வீட்டுக் கண்காணிப்பில் 39 ஆயிரம் பேர்
சென்னை: தமிழகத்தில் 39 ஆயிரம் பேர் வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், மாநிலம் முழுவதும் 58,189 பேர் 28 நாட்களுக்கான வீட்டுக் கண்காணிப்பை முடித்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், விமான நிலையங்கள் அருகே உள்ள முகாம்களில் 62 பேர் அரசுக் கண்காணிப்பில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"தமிழகத்தில் இதுவரை 10,655 பேருக்குத் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை கொரோனா கிருமித் தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்," என்றார் பீலா ராஜேஷ்
தமிழகத்தில் கிருமித் தொற்றுப் பாதிப்பைக் கண்டறிய 14 அரசுப் பரிசோதனை மையங்களும் 9 தனியார் மையங்களும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் தொற்று நோய்க் கட்டுப்படுத்துதல் திட்டம் தற்போது 34 மாவட்டங்களில் உள்ள 459 இடங்களில் செயல்பட்டு வருவதாகவும் இதன்மூலம் 20 லட்சத்து 47 ஆயிரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் பீலா ராஜேஷ் கூறினார்.
இந்த வீடுகளில் இருந்த சுமார் 83 லட்சம் பேருக்கு முதற்கட்ட சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தொற்றுநோய் கட்டுப்படுத்துதல் பணியில் 34,797 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில்தான் கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு அதிகமுள்ளது. இதுவரை 2 அரசு மருத்துவர்கள், 2 ரயில்வே மருத்துவர்கள் மற்றும் 4 தனியார் மருத்துவர்களுக்குக் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது," என்று பீலா ராஜேஷ் கூறினார்.
7 வார்டுகளைச் சேர்ந்த மக்கள் முடக்கப்பட்டனர்
வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே செல்ல அனுமதி: விழுப்புரம்: கொரோனா கிருமித் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக விழுப்புரம் நகரில் 7 வார்டுகள் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டும் காய்கறி, மளிகைச் சாமான்கள் போன்றவற்றை வாங்க அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் இதற்காக நீலம், ஆரஞ்சு, பச்சை, மஞ்சள், ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
344 பேர் தாயகம் திரும்பினர்
சென்னை: அமெரிக்கா, ஜப்பானைச் சேர்ந்த 344 சுற்றுலாப் பயணிகள் சிறப்பு விமானங்கள் மூலம் சென்னையிலிருந்து தாயகம் திரும்பினர்.
நேற்று முன்தினம் சென்னையிலிருந்து மும்பை வழியாக அமெரிக்காவுக்கு 96 பயணிகளும் ஜப்பானுக்கு இயக்கப்பட்ட விமானத்தில் 248 பேரும் பயணம் செய்தனர்.
இறுதிச்சடங்குக்கு கட்டுப்பாடுகள்
சென்னை: கொரோனா கிருமித் தொற்றால் உயிரிழப்பவரின் உடல் அடக்கத்தின்போது நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நோய்த்தொற்றால் உயிரிழப்போரின் உடலை சுகாதாரப் பணியாளர்கள் எவ்வாறு கையாள வேண்டும், உடல் அடக்கம், தகனம் செய்யப்படும் இடங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அந்த அமைச்சு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இறந்தவர்களின் உடலைப் பெரிய பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாகச் சுற்றவேண்டும். பின்னர் அந்த பிளாஸ்டிக் உறையின்மீது சோடியம் ஹைப்போகுளோரைடு தெளிக்கப்பட வேண்டும். உடலைக் கையாளுபவர்கள் முகக்கவசம், கையுறை அணியவேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. "இறந்தவர் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால் மருத்துவப் பணியாளர் முகத்தை மட்டும் திறந்து காட்டலாம். அவரைத் தவிர உடலைத் தொட யாருக்கும் அனுமதி இல்லை. இறந்தவரின் உடலைத் தொடுவதற்கு அவசியமில்லாத மதச்சடங்குகளைச் செய்ய அனுமதி உண்டு," என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு வயது குழந்தைக்கு பாதிப்பு
திருச்சியில் தந்தை மூலம் ஒரு வயது குழந்தைக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக நான்கு பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது கொரோனா கிருமித் தொற்றுக்காக 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு ஒரு வயது குழந்தைக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சும் பொதுமக்கள் வீட்டு பால்கனி, மொட்டை மாடிகளில் இருந்தபடி அண்டை வீட்டாரை நலம் விசாரித்து வருகின்றனர்.

