சென்னை: தமிழகத்தில் கிராமப் புறங்களில் கொரோனா தொற்று அவ்வளவாக இல்லாத நிலையில் நகர்களில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவது இன்னமும் பெரும் சவாலாக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதன் காரணமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட ஐந்து மாநகராட்சிகளில் நேற்று முதல் வரும் 29ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அரசு நடப்புக்குக் கொண்டுவந்து உள்ளது.
சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், நேற்று அதிகாலை முதல் வரும் 28ஆம்தேதி இரவு 9.00 மணி வரை முழு ஊரடங்கு அமலானது.
அதேவேளையில், சில மாவட்ட ஆட்சியர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் நிர்வாகப் பகுதிகளில் ஒரு நாள் ஊரடங்கை நேற்று அமல்படுத்தினர். இதன் காரணமாக பல நகர்களில் சாலைகள் வெறிச்சோடியதாகவும் மயான அமைதி நிலவியதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
தடையை மீறி வெளியே வந்தவர்கள் குறைவாகவே இருந்தனர் என்றும் அவர்களை அதிகாரிகள் எச்சரித்து திருப்பி அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே, முழு ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காது என்று தவறாகப் புரிந்துகொண்ட பொதுமக்கள், காய்கறி உள்ளிட்ட அவசியமான பொருட்களை வாங்க சனிக்கிழமை ஒரே நாளில் லட்சக்கணக்கில் திரண்டதால் சென்னை உள்ளிட்ட பல நகர்களிலும் கடைகள் பலவும் காலை 9 மணிக்கே காலியாயின.
சரக்குகள் விற்றுத்தீர்ந்துவிட்டதால் பல மளிகைக் கடைகளும் சில மணி நேரத்தில் மூடப்பட்டன. மாலை 3 மணி வரை கடைகளைத் திறக்க அவசரமாக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனாலும் தேவையான பொருட்கள் கிடைக்காமல் ஏராளமான மக்கள் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.

