அரியலூர்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக தமிழ்நாட்டில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். பணப்புழக்கம் குறைந்துவிட்டது. வேலையும் இல்லை. இந்தச் சூழலில் அரியலூர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளில் பழைய பாணி பண்டமாற்று வர்த்தக முறை தலைதூக்கி உள்ளது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக மாநிலமே முடங்கி இருப்பதால் மக்களில் சிலர் பட்டினி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
கிராமப் புறங்களில் விளைந்து கிடக்கும் பொருட்களை விற்க முடியவில்லை. இந்த நிலையில் காய்கறி, நெல், மிளகாய் போன்ற பொருட்களை வாங்குவதற்கு பண்டமாற்று வர்த்தக முறையைக் கிராமத்தினர் பின்பற்றுகிறார்கள்.
"என்னுடைய நிலத்தில் மிளகாய், நிலக்கடலை விளைந்து இருக்கிறது. ஆனால் எனக்கு நெல் வேண்டும். ஆகையால் 25 கிலோ மிளகாயைக் கொடுத்துவிட்டு இரண்டரை மூட்டை நெல்லை வாங்கினேன்," என செட்டி திருக்கோணம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆர். ராஜா என்பவர் கூறினார்.
"பண்டமாற்று வர்த்தகத்தில் தரகர் கிடையாது, தில்லுமுல்லு இல்லை. கடன் அட்டையோ, பற்று அட்டையோ தேவையில்லை. பணப்புழக்கமும் அவசியமில்லை. ஆகையால் இது மிகவும் வசதியாக இருக்கிறது," என்று டி. கருணாநிதி என்பவர் கூறினார்.
"நான் இரண்டரை மூட்டை நெல்லை கொடுத்துவிட்டு மிளகாயை வாங்கினேன். காய்கறிகளையும் இதே போல் வாங்கிக்கொள்கிறோம். விளை பொருள்களை வெளியே கொண்டு சென்று விற்க முடியவில்லை. ஆகையால் எங்கள் கிராமத்தில் பண்டமாற்று வர்த்தகம் சூடுபிடிக்கிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
"நேரடியாக கொடுக்கல் வாங்கல் நடப்பதால் எல்லாம் சுமுகமாக முடிகிறது. அறவே பணப்புழக்கம் தேவையில்லாத சூழ்நிலையும் ஏற்படுகிறது," என்றாரவர்.

