சென்னை: தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா கிருமித்தொற்று வேகம் குறைவதாகத் தெரிந்தாலும் தலைநகர் சென்னை இன்னமும் கவலை தரும் நிலையிலேயே இருக்கிறது.
அங்கு நேற்று வரை 523 பேரை கிருமி தொற்றி இருந்தது. நாள்தோறும் குறைந்தபட்சம் 1,500 பேர் சோதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நகரில் 168 இடங்களைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களாக நேற்று அறிவித்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதியன்று இத்தகைய இடங்களின் எண்ணிக்கை 84 ஆக இருந்தது.
அந்தப் பகுதிகளில் வீடு வீடாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அனைத்து மக்களும் 24 மணி நேரமும் கண்காணிக்கப் படுகிறார்கள்.
சென்னையில் ராயபுரம் பகுதியில்தான் பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசாங்க மருத்துவமனை கிருமித்தொற்று மையமாக உருவெடுக்கும் மிரட்டல் ஏற்பட்டு இருக்கிறது.
அந்த மருத்துவமனையில் குறைந்தபட்சம் ஒன்பது மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், இரண்டு நோயாளிகள், ஒரு மருந்தாளுநர் ஆகியோருக்கு கொரோனா கிருமி தொற்றி இருக்கிறது.
துப்புரவு ஊழியர் ஒருவருக்குக் கிருமித்தொற்று இருந்ததால் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தங்கி உள்ள விடுதி மூடப்பட்டுவிட்டது.
அந்த விடுதியில் தங்கியிருந்த 102 மருத்துவர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களில் இரண்டு பேருக்கு கிருமித்தொற்று இருந்தது தெரியவந்ததாகவும் மருத்துவமனை குறிப்பிட்டது.
தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி ஞாயிற்றுக்கிழமை புதிதாக 64 பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 1,885 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. 24 பேர் மரணம் அடைந்தனர். 1,020 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.
கொரோனா கிருமித்தொற்று சூழலில் மாநில எல்லைப் பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைத் தடுப்பதற்காக வேலூர் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் இரண்டு முக்கிய இடங்களில் தடுப்புச் சுவரை தமிழக அரசு கட்டுகிறது.

