கன்னியாகுமரி: கர்நாடகாவுக்கு வேலைக்குச் சென்ற ஆறு பேரை கொரோனா கிருமி தொற்றவில்லை என்றாலும் வாழ்க்கையில் இதுநாள்வரை இல்லாத அளவுக்கு அவர்களுக்குச் சோதனைகளையும் சிரமங்களையும் கொடுத்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிராம், 19, ராஜாபார்த்தி, 20, விக்னேஷ், 22, ராமராஜ், 23, சிதம்பரத்தைச் சேர்ந்த அருள், 19, திருவாரூரைச் சேர்ந்த சுரேந்திரன், 20, ஆகிய ஆறு பேரும் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் மாவட்டத்தில் இணைய வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தனர்.
அந்த மாநிலத்தில் ஊரடங்கு நடப்புக்கு வந்ததை அடுத்து அவர்களுக்கு வேலை போய்விட்டது. கையில் பணம் இல்லாமலும் தங்க இடம் இல்லாமலும் பரிதவித்த அந்த ஆறு பேரையும் ஒரு வாகனத்தில் தமிழ்நாட்டு எல்லையில் கொண்டுவந்து விட்டுவிட்டு அவருடைய முதலாளி திரும்பிச் சென்றுவிட்டார்.
எந்தவித ஆதரவும் இன்றி தவித்த அந்த இளைஞர்கள், ஓசூரில் இருந்து கால்நடையாகவே தங்கள் ஊர்களுக்குச் செல்லலாம் என்று முடிவு எடுத்து நடக்கத் தொடங்கினர்.
வழியில் ஓய்வு இல்லாமல், உணவில்லாமல், உறக்கமில்லாமல் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடையாய் நடந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள சேலம் நகரை அவர்கள் அடைந்தனர்.
அங்கு போலிசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது ஆறு இளைஞர்களும் தங்களுடைய கதியைப் பற்றி அதிகாரிகளிடம் விளக்கினர்.
கருணை உள்ளம் கொண்ட போலிஸ் அதிகாரிகள், முதல் வேலையாக அந்த ஆறு பேருக்கும் பசி தீரும் அளவுக்கு உணவு வாங்கிக் கொடுத்தனர்.
பிறகு விவரங்களை எல்லாம் கேட்டு அறிந்து லாரிகள் மூலம் அந்த இளைஞர்களை அவரவர்களின் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இப்படி உதவிய போலிஸ் அதிகாரிகளை அந்த ஆறு பேர் மட்டுமின்றி பொதுமக்களும் பெரிதும் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.

