புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று ஏழை எளிய மக்களின் வாழ்வோடு தொடர்புடைய இந்தப் பிரச்சினை என்றும் இதைக் கையாள்வதில் அனைவரும் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 300 மாவட்டங்களில் தற்போது கொரோனா கிருமித் தொற்று இல்லை என்றும், அவை அனைத்தும் புனிதமான பகுதிகளாக மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிருமித்தொற்று தொடர்பாக நேற்று பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி வசதி மூலம் கலந்தாலோசனையில் ஈடுபட்டார். அப்போது ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, கொரோனா கிருமித்தொற்றுடன் போராடிக்கொண்டே நாட்டின் பொருளாதாரத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது என்றார்.
இனி வரப்போகும் மாதங்களில் கொரோனாவின் தாக்கம் நிச்சயம் இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், முகக்கவசமும் முகமூடிகளும் வாழ்வின் அங்கங்களாக மாறலாம் என்றார்.
சில மாநிலங்களின் முதல்வர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் சில பரிந்துரைகளை வழங்கி இருப்பதாக குறிப்பிட்ட அவர், அவற்றின் அடிப்படையில் மத்திய அரசு செயல்படும் என்றார்.
பச்சை மண்டலங்களை அதிகரிக்க வேண்டும் என்பதே நமது தாரக மந்திரமாக இருக்கவேண்டும் என்றும் இந்த இக்கட்டான சூழ்நிலை பலவற்றை சீர்திருத்துவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
"கடந்த ஒன்றரை மாதங்களில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததால், பொது முடக்கம் நமக்கு சாதகமான முடிவுகளை அளித்துள்ளது," என்றார் பிரதமர் மோடி.
முடிந்தவரை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் சரிசெய்ய வேண்டியது அவசியம் என்றார்.

