சென்னை: தமிழகத்தில் கொவிட் 19 நோயாளிகளின் இறப்பு விகிதமானது 1.2 விழுக்காடு என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் 1,020 நோயாளிகள் அதாவது 54 விழுக்காட்டினர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக பிரதமர் மோடியுடனான காணொளிப் பதிவு மூலம் நடைபெற்ற கலந்தாலோசனையின்போது அவர் குறிப்பிட்டார்.
கொரோனா கிருமித்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் கருவிகளை வாங்க வேண்டியுள்ளது என்றும், இதற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம், முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.
"தமிழகத்தில் இதுவரை 87 ஆயிரத்து 605 சளி மாதிரிகளை பரிசோதித்ததில் 1,885 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனைக்காக 30 அரசு மற்றும் 11 தனியார் சோதனைக் கூடங்கள் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 7,500 மாதிரிகளைப் பரிசோதனை செய்ய முடியும்," என்றார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தின் இதர சில தேவைகளுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

