சென்னை: தமிழ்நாட்டில் கள்ளப்பணப் புழக்கம் தொடர்பில் ஆறு பேர் அடங்கிய ஒரு கும்பல் போலிசிடம் சிக்கி இருக்கிறது.
அந்தக் கும்பல் மாநிலம் முழு வதும் கள்ளப்பணக் கைவரிசை யைக் காட்டி இருக்கிறது என்று போலிசார் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் பல கோணங்களிலும் அவர்கள் விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.
கள்ளப்பணக் கட்டமைப்புடன் மேலும் பலர் தொடர்பில் இருக்கலாம் என்பதால் எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு கள்ளப்பணம் புழங்கி இருக்கிறது, யார் யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை எல்லாம் போலிஸ் துருவித்துருவி ஆராய்கிறது.
அதிகாரிகளிடம் சிக்கி உள்ள கும்பலின் காரணகர்த்தா என்று கருதப்படும் மணிகண்டன், 34, என்பவரின் வீட்டில் ரூ. 65 லட்சம் கள்ளப்பணம் சிக்கி இருக்கிறது. அவற்றில் 10, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் அடங்கும். பல சாதனங்களும் கைப்பற்றப்பட்டன.
மணிகண்டனுக்கு கள்ளப்பணத் தொழில்நுட்பம் தெரியும் என்று கூறப்படுகிறது.
கள்ளப்பணத்தை இந்தக் கும்பல் மாநிலம் முழுவதும் மதுபானக் கடை போன்ற கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் சந்தேகம் ஏற்படாத வகையில் புழக்கத்தில் விட்டு வந்துள்ளது என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
சந்தோஷ்குமார், 33, என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அடுத்த மூங்கித்தாம்பட்டி மதுக்கடையில் கடந்த 16ஆம் தேதி கள்ளப்பணத்தைக் கொடுத்து மது வாங்கியபோது பிடிபட்டார். பிறகு ராமச்சந்திரன், 30, இப்ராஹிம், 27, முகம்மது நசுரூதின், 32, சுரேஷ், 48, ஆகிய நால்வரும் பிடிபட்டனர். பிறகு மணிகண்டன் சிக்கினார்.
மணிகண்டன் சென்னையில் பொருட்காட்சிகளை நடத்தும் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களாக வேலை இல்லாததால் கள்ளப்பணம் அச்சடிப்பதில் அவர் ஈடுபட்டார் என்று தெரிகிறது.