தஞ்சை: தமிழகத்தில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்கவேண்டும் என்றும் கொரோனா நிவாரண நிதி கிடைக்கவில்லை என்று கோரியும் பல இடங்களில் நேற்று ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சையில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்ற ஓட்டுநர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதேவேளையில், தமிழக அரசு அறிவித்த கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 இதுவரை வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்து திருவாரூரில் தொழிலாளர் நல வாரியம் முன் குடைகளை ஏந்தி ஆட்டோ தொழிலாளர்கள் பலரும் ஒன்றுகூடி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

