சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி, புதன்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் வழியாகச் சென்றுகொண்டிருந்தார். அவர் சாலையைக் கடந்து செல்வதற்காக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், திடீரென்று முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்குக் குறுக்கே புகுந்து பாதுகாப்பு வாகனத்தை இடிப்பதைப் போல் பறந்து சென்றனர்.
இது பற்றி போலிஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் புயல் போல் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அந்த இருசக்கர வாகனத்தின் எண்ணைக் கண்டுபிடித்த கட்டுப்பாட்டு அறை, அதை நகர போலிசார் அனைவருக்கும் தெரியப்படுத்தி அந்த இருசக்கர வாகனத்தை எங்கு சென்றாலும் மடக்கிப் பிடிக்கும்படி கட்டளையிட்டது.
நகர் முழுவதும் போலிஸ் விழிப் படைந்தது.
இந்நிலையில், அந்த இருவரும் பல இடங்களிலும் புகுந்து புகுந்து போலிசாரிடம் பிடிபடாமல் தப்பிச் சென்றனர். வழியில் நேப்பியர் பாலத்தில் பணியில் இருந்த அதிகாரிகள், அவர்களின் வாகனத்தை நிறுத்த முயன்றபோது ஜெகதீசன் என்ற போலிஸ் அதிகாரியின் காலில் மோதிவிட்டு அவர்கள் தப்பினர். ஆனால் எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்து இளைஞர்கள் இருவரும் இலேசாக காயம் அடைந்தனர்.
நவீன், 19, சரத்குமார், 20, என்ற அந்த இருவரையும் கைது செய்த போலிசார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பிறகு பிணையில் விடுவித்தனர். அவர்கள் இருவரும் கஞ்சா புழங்கிகள் என்பது தெரியவந்தது.
இருவரும் வந்த இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரிடத்திலும் கஞ்சா பிடிபட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.