சென்னை: சென்னையைத் தவிர தமிழகம் எங்கும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாக்களை ஒற்றை பயணியுடன் ஓட்டுவதற்கு வாகன ஓட்டிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆட்டோ, ரிக்ஷா வாகன ஓட்டிகளும் அதில் பயணம் செய்யும் பயணியும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என்றும் வாகனங்களில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் கிருமிநாசினி வைத்திருப்பது அவசியம் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
வாகன அனுமதி தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
“இப்போது சென்னை மாநகராட்சி காவல் எல்லையைத் தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா வாகனங்களை ஓட்டுநருடன் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை முதல் தினமும் காலை 7 முதல் இரவு 7 மணி வரை மட்டும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.
“நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, ரிக்ஷாக்களை இயக்கக் கூடாது. வாகனங்களை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவி சுகாதாரத்தை பேண வேண்டும்,” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பயணியின் வருகைக்காக ஆட்டோ நிறுத்தும் இடத்தில் காத்திருக்கும் ஆட்டோ வாகனங்கள்.
படம்: ஊடகம்