சென்னை: தமிழகத்திற்கு குளிர் சாதன வசதி செய்யப்படாத நான்கு சிறப்பு ரயில்களை விடக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
ரயில் சேவைகளை கோவை- மயிலாடுதுறை, மதுரை-விழுப்புரம், திருச்சி-நாகர்கோவில், கோவை- காட்பாடி இடையேயான வழித்தடங்களில் இயக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிருமியின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் சிறப்பு ரயில்கள் தமிழகத்திற்கு இயக்கப்பட வேண்டாம் என தமிழக அரசு ஏற்கெனவே மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை.
வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் சென்னையைத் தவிர்த்து நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்நிலையில், 4 சிறப்பு ரயில்களை இயக்கக் கோரி தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே அனுப்பி வைத்துள்ளது.
இதையடுத்து, அடுத்தடுத்து ரயில்வே அமைச்சகம் அறிவிக்க உள்ள பயணிகள் சிறப்பு ரயில்களில், தமிழகத்திற்கு நான்கு சிறப்பு ரயில்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

