சேலம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை சனிக்கிழமை அதிகாலையில் போலிசார் கைது செய்தது குறித்து ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே இப்போது காரசார வாக்குவாதம் வெடித்து வருகிறது.
ஆர்.எஸ். பாரதி கைதுக்கும் தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சட்டத்தின் அடிப்படையிலேயே கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி விளக்கம் கூறி யிருந்தார்.
இந்நிலையில், “அப்படியானால் பாரதியை கைது செய்தது ஆந்திர போலிசா?” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கையில், “ஆர்.எஸ்.பாரதியை ‘அவர் என்ன விஞ்ஞானியா?’ என முதல்வர் கேட்டுள்ளார். ஜெயலலிதா மீதே டான்சி நில பேர ஊழல் வழக்கு போட்டு ஆட்டம் காண வைத்தவர் ஆர்.எஸ்.பாரதி. அவரது கைதுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என முதல்வர் கூறியிருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாக உள்ளது.
“காவல்துறை யார் கட்டுப் பாட்டில் உள்ளது?” என்று கேட்டுள்ளார் ஸ்டாலின்.
கைது விவகாரம் தொடர்பில் சேலத்தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறுகையில், “அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
“உண்மையான எதிர்க்கட்சித் தலைவர் எனில் அவரது கட்சிக்காரரை அவர் கண்டித்திருக்க வேண்டும். அதுதான் அரசியலில் அழகு. ஆனால், அரசியல் நாடக மாடி மற்றவர் மீது பழி போட்டு தப்பிக்கிறார்.
“பாரதி கைதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? பாரதி என்ன பெரிய விஞ்ஞானியா? என் மீது ஊழல் புகார் செய்ததால் அவரை நான் கைது செய்ய வைத்துள்ளதாக அவதூறாக குற்றம் சாட்டியுள்ளனர்,” எனக் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முதல்வர் சொல்லி இருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதையாகும். கைது செய்திருப்பது தமிழக காவல்துறை என்றால் அரசுக்கு சம்பந்தம் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்