சென்னை: தமிழ்நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று தாறுமாறாகக் கூடிவருவதன் காரணமாக அந்த மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட வட்டாரங்களின் எண்ணிக்கை 1,143 ஆக அதிகரித்துவிட்டது.
சென்னையில் மட்டும் அத்தகைய 635 மண்டலங்கள் இருப்பதாகவும் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏறக்குறைய 225 கட்டுப்படுத்தப்பட்ட வட்டாரங்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதர எல்லா மாவட்டங்களிலும் இத்தகைய பகுதிகளின் எண்ணிக்கை 30க்கும் குறைவு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
தமிழ்நாட்டில் புதிதாக கொரோனா கிருமி தொற்றுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அச்சமூட்டும் வகையில் கூடி வருகிறது. நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 16,277 பேரைக் கிருமி தொற்றி இருந்ததாக மாநிலத்தின் சுகாதாரத் துறை தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் புதிதாக 765 பேரைக் கிருமி தொற்றியது. எட்டு பேர் மாண்டுவிட்டார்கள். மொத்தம் 111 பேரைக் கொரோனா கிருமி கொன்றுவிட்டது. புதிதாக கிருமி தொற்றியோரில் சுமார் 47 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.
இதனிடையே, சென்னையில் கிருமித்தொற்று அதிகமாக இருப்பதால் அங்கு சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசாங்கம் வலியுறுத்திக் கூறி இருக்கிறது.
சென்னையில் 200 கர்ப்பிணிகள் உட்பட 10,576 பேரைக் கிருமி தொற்றி இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 833 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இதுவரை மொத்தம் 8,324 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். 5,643 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 409,615 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 392,601 மாதிரிகளில் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.