சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்குப் பிறகு தொடர்ந்து அதிக காலம் பதவி வகிக்கும் கட்சி என்ற சாதனையை அதிமுக நிகழ்த்தி இருக்கிறது.
அதிமுக அரசாங்கம் இப்போதைய பதவிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டில் சனிக்கிழமை காலடி எடுத்து வைத்தது. அந்த அரசு தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளுக்கும் அதிக காலம் பதவி வகித்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகாலம் பதவி வகித்துள்ள கட்சி காங்கிரஸ் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக, 2011 மே 16ஆம் தேதி நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. நான்காவது தடவையாக ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
2016 மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக வென்றது. ஜெயலலிதா 2016 மே 23ஆம் தேதி ஆறாவது தடவையாக முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். அது முதல் அதிமுக ஆட்சி நடந்து வருகிறது.
இப்போது மேலும் ஓர் ஆண்டு பதவிக்காலம் எஞ்சி இருக்கிறது. 2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியை ஏற்று 2017 பிப்ரவரி 15 வரை அந்தப் பதவியை வகித்தார். அதற்குப் பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி இன்னமும் அந்தப் பதவியில் தொடர்ந்து வருகிறார்.
அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர், 1977ல் ஜூன் மாதத்திற்கும் 1987 டிசம்பருக்கும் இடையில் முதல்வராக பதவி வகித்தார். என்றாலும் 1980 பிப்ரவரி முதல் ஜூன் வரை தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. அப்போது அதிபர் ஆட்சி நடந்தது.
இதற்கெல்லாம் முன்பாக 1946 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் வரை காங்கிரஸ் ஆட்சி தொடர்ந்தது. 1967ல் திமுக ஆட்சிக்கு வந்தது.
1946 முதல் 1952 வரை டி. பிரகாசம், ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ் குமாரசாமி ராஜா ஆகியோர் முதல்வர்களாகப் பதவி ஆற்றினர். சுதந்திரத்திற்குப் பிறகு 1952 பிப்ரவரியில் முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்தது.
அதில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அடுத்த 15 ஆண்டுகளில் ராஜாஜி, காமராஜர், பக்தவக்சலம் ஆகியோரை முதல்வராக்கியது.
பிறகு 1967 மார்ச் மாதம் பதவியைப் பிடித்த திமுக 1976 வரை பதவி வகித்தது.
இடையில் 1971 மார்ச்சில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அந்தக் காலகட்டத்தில் சி.என். அண்ணாதுரையும் மு. கருணாநிதியும் முதல்வர்களாக இருந்தனர்.
பிறகு 1989 முதல் 2011 வரை திமுக அல்லது அதிமுக ஆட்சி பதவி வகித்தது. இந்தப் போக்கு 2016ல் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அதிமுகவும் மறுபடியும் ஆட்சியைப் பிடிக்க திமுகவும் மும்முரமாக முயன்று வருகின்றன.
இதற்கான வியூகமாக போட்டி போட்டுக்கொண்டு அரசியல் ஆலோசகர்களைக் அவை களம்இறக்குகின்றன.
திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுகவின் தேர்தல் ஆலோசகராக சுனில் நியமிக்கப்பட்டுள்ளார்.