கூடலூர்: தமிழகத்தில் கொரோனா கிருமி எத்தனையோ திருமணங்களை ஒத்திவைத்துவிட்டது. பல திருமணங்களை வீடுகளில், கோயில்களில் குடும்பத்தார் மட்டும் கலந்துகொள்ளுமாறு செய்து கூட்டத்தைக் குறைத்துவிட்டது. அப்படியே திருமணம் நடந்தாலும் தாலி கட்டியதும் புதுமணத் தம்பதியர் பலரைப் பிரித்தும் தவிக்கவிட்டுவிட்டது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே புதுப்பட்டியைச் சேர்ந்த பிரசாத், 25, என்பவருக்கும் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், காரப்புழாவைச் சேர்ந்த காயத்ரிக்கும், 19, குமுளி அருகே வண்டிப்பெரியாறு வாளார்டி மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது. ஆனால் மணமகன் குடும்பத்தாருக்கு கேரளா செல்ல அனுமதி கிடைக்கவில்லை.
அதேபோல் மணமகள் வீட்டார் தமிழகம் வரவும் அனுமதி இல்லை. ஆகையால் இரு மாநில எல்லை அருகே திருமணம் நடந்தது.
மணமக்களை எல்லைப்பகுதியில் இருந்த கேரள வருவாய்த்துறை அதிகாரிகள், போலிசார், தொண்டூழியர்கள் எல்லாரும் வாழ்த்தினர்.
தாலி கட்டி முடித்த சிறிது நேரத்தில் மணமகள் தனது ஊருக்குக் கிளம்பிச் சென்றதால், மணமகன் பிரசாத் ஏமாற்றத்துடன் தன் ஊருக்குத் திரும்பினார்.
இதைப் போல், சென்னையில் வேலை பார்க்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சேலம் கங்கவல்லியைச் சேர்ந்த ஒருவருக்கும் சென்னையில் நேற்று திருமணம் நடந்தது. மணப்பெண்ணுக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் பலவற்றையும் கருத்தில் கொண்டு அதிகாரிகள் திருமணத்துக்குப் பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.
ஆனால் தாலி கட்டிய உடனேயே மணமக்கள் இருவரும் அடுத்த 28 நாட்களுக்கு அவரவர் வீட்டில் தனித்து இருக்கவேண்டும் என்று சொல்லி இருவரையும் அதிகாரிகள் பிரித்து அனுப்பிவிட்டனர்.
இரு வீட்டார்களும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓரிரு நாட்களில் இரு வீட்டாரிடம் இருந்தும் ரத்த மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் முடிவுகளை வைத்து மேல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.