சென்னை: காரும் மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் மோட்டார்சைக்கிளோட்டி காரின் மேலேயே தூக்கி வீசப்பட்ட சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.
மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த இளையர், தமது காரின் மீது விழுந்து கிடந்தது தெரியாமல், தப்பிக்கும் நோக்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு காரை ஓட்டிச் சென்றவரை போலிசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். காரின் மேலே இருந்த இளையர் மீட்கப் பட்டார்.
அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார்சைக்கிளும் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரது காரும் நேற்று முன்தினம் இரவு சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மோதிக்கொண்டன.
விபத்து ஏற்படுத்தியது, தப்ப முயற்சி செய்தது ஆகிய பிரிவுகளின் கீழ் கணேசமூர்த்தி மீது போலிஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
விபத்தில் காயமடைந்த ரஞ்சித் குமாருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் இப்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.