விருதுநகர்: திருமணத்தின்போது வீண் செலவுகளைக் குறைத்து அதன் மூலம் 50 ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்திய புதுமணத் தம்பதியர் அதை கொரோனா நிதியாக வழங்கி பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.
விருதுநகரைச் சேர்ந்த கபில்ராஜ் ஆதித்யா, சப்தமி ஆகிய இருவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. பெரியளவில் நடைபெற இருந்த திருமணம் ஊரடங்கு காரணமாக எளிமையாக நடந்தேறியது.
முன்னதாக வீண், ஆடம்பர ஏற்பாடுகளைத் தவிர்க்குமாறு மணமக்கள் இருவரும் தங்கள் குடும்பத்தாரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
“தினமும் பல்வேறு தரப்பினர் ஆதரவற்றோருக்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்கித் தருவது என ஏதேனும் ஒருவகையில் சேவையாற்றி வருவதை கேள்விப்பட்டோம். எனவே நம் பங்களிப்பும் இருக்கட்டும் என முடிவெடுத்து திருமணச் செலவுகளைக் குறைத்தோம்,” என்கிறார் சப்தமி.
இவ்வாறு மிச்சப்படுத்திய 50 ஆயிரம் ரூபாயை திருமணம் முடிந்த அடுத்த ஒருமணி நேரத்தில் மணக்கோலத்துடன் சென்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் இப்புதுமணத் தம்பதியர் ஒப்படைத்தனர்.
“எங்களைப் போல் ஊரடங்கு வேளையில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும்,” என்கிறார் கபில்ராஜ் ஆதித்யா.