சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மட்டும் புதிதாக 805 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நோய்த்தொற்றைக் கண்டறிய மிக அதிகமானோருக்கு பரிசோதனை செய்த மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையுடன் குணமடைவோரும் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இதுவரை 8,731 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் உயிரிழப்பு விகிதம் 0.69 விழுக்காடாக, ஆகக் குறைந்த அளவில் உள்ளது.
இதற்கிடையே மாநிலத்தில் பொது போக்குவரத்து துவங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும்நிலையில், ரயில் போக்குவரத்தும் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை தவிர்த்து, மதுரை, கோவை உள்ளிட்ட 25 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்தை விரைவில் துவக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தனியார் பேருந்து போக்குவரத்தும் குறிப்பிட்ட வழித்தடங்களில் அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என நேற்று மாலை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.