சென்னை: உள்நாட்டு விமானப் போக்குவரத்தை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப சில கட்டுப்பாடுகளுடன் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், சென்னை விமான நிலையத்துக்கு நாளொன்றுக்கு வரும் உள்ளூர் விமானங்களின் எண்ணிக்கை 25ஆக கட்டுப்படுத்தப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கோவை, திருச்சி, மதுரைக்கு விமானங்களை இயக்கலாம் என்றும் கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் இருந்து சென்னை வரும் விமானங்களை அனுமதிப்பதிற்கு மிகக்குறைவான வாய்ப்பே உள்ளது என்றும் தமிழக தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் தமிழகத்தில் இருந்து மற்ற இடங்களுக்குச் செல்லும் விமானங்களின் எண்ணிக்கையில் எந்த நிபந்தனைகளும் இல்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே சேலத்தில் இருந்து விமானங்களை இயக்க மத்திய அரசு அனுமதித்ததை அடுத்து நேற்று அங்கிருந்து சென்னைக்கான விமானச்சேவை தொடங்கியது. இதனால் சேலத்தைச் சேர்ந்த தொழில் முனைவோரும் வணிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.