சென்னை: தமிழகத்தில் 17 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க காட்டியுள்ள ஆர்வத்தால் சுமார் 47,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரூ.15,128 கோடி முதலீட்டில் தொழில் மையங்கள் நிறுவப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்தங்கள் சென்னை தலைமைச் செய லகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின.
ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், தைவான், தென்கொரியா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 நிறு வனங்களில் ஒன்பது நிறுவனங்கள் நேரடியாகவும் எட்டு நிறுவனங்கள் காணொளிக் காட்சி வழியாகவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
கொரோனா கிருமித் தொற்று தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளையும் சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பைச் சந்தித்து வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கனரக வாகன உற்பத்தி, மின்னணுப் பொருள் உற்பத்தி, காலணி உற்பத்தி, தகவல் தரவு மையம், எரிசக்தி, மருந்துப் பொருள் உற்பத்தி என பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதிய தொழில் திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.2,277 கோடி முதலீட்டில் ஜெர்மன் நாட் டைச் சேர்ந்த நிறுவனத்தின் கனரக வாகனங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்குரிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்துடன், ஸ்ரீபெரும்புதூரில் நோக்கியா தொலைத்தொடர்பு சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ரூ.1,300 கோடி முதலீட்டிலும் திரு வள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ரூ.3,000 கோடி முதலீட்டிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ரூ.2,000 கோடி முதலீட்டிலும் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் நிறுவனத்தின் கைபேசி உதிரி பாகங்கள் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.900 கோடி முதலீட்டில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனமும் ரூ.350 கோடி முதலீட்டில் தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனமும் மற்றும் Aston Shoes Pvt Ltd நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் காலணி உற்பத்தி திட்டம், ரூ.400 கோடி முதலீட்டில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த Lai Investment Manager Private Limited நிறுவனத்தின் தொழிற்பூங்கா திட்டம், பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.150 கோடி முதலீட்டில் தென் கொரியா நாட்டை சேர்ந்த Mando Automotive India Private Limited நிறுவனத்தின் காஸ்டிங் ஃபெசிலிட்டி திட்டம், செங்கபட்டு மஹிந்த்ரா தொழிற்பூங்காவில் ரூ.100 கோடி முதலீட்டில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Dinex நிறுவனத்தின் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம் ஆகியவற்றுக்கும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தப் புதிய ஒப்பந்தங்களின் மூலம் 47,000 புதிய வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online