சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசு யார் என்ற சர்ச்சைக்கு முடிவு வந்துள்ளது என்று அவரது அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டரீதியான விஷயங்கள் முடிந்த பிறகு ஜெயலலிதாவின் வேதா இல்லத்திற்குச் செல்லப் போவதாகக் குறிப்பிட்டார்.
சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது என்றார் அவர்.
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்தார் தீபா. அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி ஜெயலலிதாவின் சகோதரரின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரையும் இரண்டாம் நிலை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவித்துள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள அனைத்து சொத்துகளுக்கும் தாங்கள் உரிமை கோரவில்லை என ஜெ.தீபக் தெரிவித்துள்ளார்.
“நானும் எனது அக்கா தீபாவும் எங்களது பரம்பரைச் சொத்துகளுக்கு மட்டும்தான் உரிமை கோரினோம்.
“உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்து அக்காவுடன் கலந்து பேசி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்,” என்று செய்தியாளர்களிடம் தீபக் தெரிவித்துள்ளார்.