சென்னை: ஊரடங்கு காரணமாக காய்கறிகளின் விலை வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்திருப்பதாகவும் காய்கறிகளை வாங்க போதுமான வாடிக்கையாளர்கள் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை, மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு சந்தைகளுக்கு அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள், இதர வாகனங்களில் காய்கறிகள் வருகின்றன.
கிருமித்தொற்று பரவலைத் தடுக்க கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளது. தற்காலிகமாக மாற்று இடம் ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் தினமும் இரண்டு லட்சம் கிலோ காய்கறிகள் வீணாவதாக சென்னை வியாபாரிகள் புலம்புகின்றனர்.
இதே போல் மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை வியாபாரிகளும் முன்பு போல் வியாபாரம் நடக்கவில்லை என்றும் காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
மதுரை சந்தைக்கு தேனி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 100 லாரிகள், 25 வேன்களில் காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன.
ஊரடங்கு அமலான தொடக்க நாட்களில் காய்கறிகளின் விலை மளமளவென அதிகரித்து பெரும் லாபத்தைத் தந்தது என்றும் தற்போது வியாபாரம் சரிபாதியாக குறைந்துவிட்டது என்றும் மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
“உணவகங்களில் வியாபாரம் இல்லை. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கவில்லை என்பதால் காய்கறிகளின் விலை குறைந்துவிட்டது. காய்கறிகள் அழுகாமல் இருக்க சில்லறை வியாபாரிகளுக்கு கடனுக்கு விற்கிறோம்.
“எங்களை விட விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். லாபம் கிடைக்காவிட்டாலும் பறிப்புக் கூலி, போக்குவரத்துச் செலவுக்குக் கூட கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனைப்படுகின்றனர்,” என்கிறார் முருகன்.