சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 55 விழுக்காட்டினர் குணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா கிருமித்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டார்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் கொவிட்-19 நோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிகளவில் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட அவர், இதுவரை 4,55,216 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“தமிழகத்தில் இதுவரை 10,548 பேர் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களில் கிருமித்தொற்று உள்ளவர்களைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
“பிற மாநிலங்களில் இருந்து வந்த 1,253 பேருக்கு இதுவரை கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்கும் நோய்த்தொற்று உள்ளது,” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
மூன்று மாதங்களாக கடினமாக உழைத்து வரும் மருத்துவப் பணியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொது மக்களின் ஒத்துழைப்பு முழு அளவில் இருந்தால் மட்டுமே கொரோனா கிருமி விவகாரத்தில் மீண்டு வர முடியும் என்றார்.
அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.